யோகாசனம் செய்யும் முறைகள்
ஆசனம் என்றால் இருக்கை என்று பொருள்படுகிறது. உடலாலும், மனதாலும் பாதிக்கப்பட்ட ஒருவரால் சூழலுக்கு ஏற்றபடி ஒழுங்காக இருக்க முடியாது. உடலும் மனமும் அலை பாய்ந்து கொண்டே இருக்கும். நல்ல உடல் திடமும், மன ஆரோக்கியமும் உடைய ஒருவரால் மட்டும் தான் எந்தச் சூழலிலும் தன்னைத் தக்க வைத்துக் கொள்ள முடியும்.
நின்ற நிலை ஆசனம், அமர்ந்த நிலை ஆசனம், மல்லாந்த நிலை ஆசனம்,குப்புற நிலை ஆசனம் என்ற நான்கு நிலையில், உடலை முன்புறமாக வளைப்பதும் உடலை பின்புறமாக வளைப்பதும் பக்கவாட்டில் வளைப்பதும், உடல் தாங்கி இருப்பதும், என்று உறுதி நிலைப்படுத்தும் வகையில் ஆசனங்கள் கற்பிக்கப்பட்டு வருகின்றன.
யோகம் என்பது, சில மணி நேரம் மட்டும் செய்யக் கூடிதாக இருக்கக் கூடாது. வாழ்வின் எல்லாத் தருணங்களிலும் கடைப் பிடிப்பதாக இருக்க வேண்டும் என்கிறார்கள். எல்லா நேரமும் ஆசனம் செய்வது உகந்ததல்ல என்கிறார்கள்.
அதிகாலை 4 மணி முதல் 8 மணி வரை என்றும், மாலையில் சூரியன் மறையும் நேரங்கங்களிலிருந்து இரவு வருவதற்குள் ஆசனப் பயிற்சிகள் செய்யலாம் எனச் சொல்கிறார்கள். ஆசனம் செய்யும் இடம் தூய்மையானதாகவும், நல்ல காற்றோட்டமாகவும், இருக்க வேண்டும். இறுக்கமில்லாத ஆடை ஆணிந்திருத்தல் ஆசனப் பயிற்சிகளுக்கு ஏற்றதாக இருக்கும்.
ஆசனப்பயிற்சியில் தொடக்கத்தில் இருப்பவர்கள் வெட்ட வெளியில் பயிற்சி எடுக்கக் கூடாது. மலம் ஜலம் கழித்த பிறகு வெறும் வயிறாக இருக்கும் போது தான், ஆசனம் செய்ய வேண்டும். உணவு உட்கொண்ட பிறகு, 4 மணி நேரம் கழித்து ஆசனம் செய்ய வேண்டும். இதற்கெல்லாம் அதிகாலை நேரமே சிறந்ததாக இருக்கும் என்கிறார்கள்.
காலை நேரம் காற்று சுத்தமாகவும், யாருடைய தொந்தரவும் இல்லாமல் இருக்கும். அதனால் ஆசனமோ தியானமோ, மூச்சு பயிற்சியோ செய்ய காலை நேரம் ஏற்றதாக இருக்கும். மேலும் ஆசனம் செய்ய இரவு 5 மணி நேரமாவது உறங்கி இருக்க வேண்டும்.
களைப்பான நாட்கள், உடல் உறவு கொண்ட நாட்கள், நோய்வாய்பட்ட நாட்கள், பெண்களின் மாத விலக்கான நாட்கள் போன்ற சமயங்களில் ஆசனப் பயிற்சியைத் தவிர்த்து விட வேண்டும். எல்லா வயது கொண்டவர்களும் யோகப் பயிற்சியை மேற்கொள்ளலாம். எந்த ஒரு கலையையும் ஆசிரியரின் துணை கொண்டு செய்வதே சிறப்பாக இருக்கும்.
யோகப்பயிற்சி மேற்கொள்வதற்கும் தகுந்த ஆசிரியர்களிடம் செல்வதே நல்லது. ஆசனத்தையோ, மூச்சு பயிற்சியையோ மாற்றி செய்தால் அதற்கான பக்க விளைவுகளை ஏற்க நேரிடும். ஆசனங்கள் செய்யும் போது எப்படி தொடங்கியதோ அப்படியே நிதானமாக வெளிவர வேண்டும்.
ஆசனங்களும், மூச்சுப் பயிற்சியும் செய்து முடித்த 30 நிமிடங்களுக்குப் பிறகே குளிக்கவோ உணவு உண்ணவோ செல்ல வேண்டும். யோகக் கலையில், தொடங்குவதற்கு முன்னால் கடைப்பிடிக்க வேண்டிய நிலையும், செய்யும் போது பின்பற்றும் முறையும், செய்து முடித்த பிறகு இருக்க வேண்டிய நிலையும் நன்கு அறிந்து வைத்திருப்பது அவசியமாக இருக்கின்றது.